Skip to content

வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

பைபிள் தரும் பதில்

 வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ள நாம் வெவ்வேறு விதத்தில் கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு, நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்கலாம். கடவுளோடு ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொள்வதுதான் நம் வாழ்க்கையின் நோக்கம் என்பதை பைபிள் காட்டுகிறது. பைபிளில் இருக்கும் அடிப்படை சத்தியங்கள் சிலவற்றைக் கவனியுங்கள்:

  •   கடவுள்தான் நம்முடைய படைப்பாளர். “அவர்தான் நம்மைப் படைத்தார், நாமே நம்மைப் படைக்கவில்லை” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 100:3, அடிக்குறிப்பு; வெளிப்படுத்துதல் 4:11.

  •   ஒரு நோக்கத்தோடுதான் கடவுள் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார், நம்மையும் படைத்திருக்கிறார்.—ஏசாயா 45:18.

  •   “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு” இருக்கும் விதத்தில்தான் கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார்; வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வப்பசியும் இதில் அடங்கும். (மத்தேயு 5:3) இந்த ஆர்வப்பசியை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.—சங்கீதம் 145:16.

  •   கடவுளோடு ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொண்டால் நம்முடைய ஆன்மீகப் பசியை நம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். கடவுளோடு நட்பா? அதெல்லாம் முடியாத காரியமென்று சிலர் நினைக்கலாம். ஆனால், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—யாக்கோபு 4:8; 2:23.

  •   கடவுளுடைய நண்பராக வேண்டுமென்றால், அவர் நம்மை எந்த நோக்கத்துக்காகப் படைத்தாரோ அந்த நோக்கத்தின்படி நாம் வாழ வேண்டும். அந்த நோக்கத்தைப் பற்றி பிரசங்கி 12:13 இப்படிச் சொல்கிறது: “கடவுளுக்குப் பயபக்தி காட்டுங்கள், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்; இதற்காக மட்டும்தான் நாம் படைக்கப்பட்டோம்.”—குட் நியூஸ் டிரான்ஸ்லேஷன்.

  •   எதிர்காலத்தில், கடவுள் எல்லா துன்பங்களையும் நீக்கிவிட்டு, தன்னுடைய நண்பர்களான தன் வணக்கத்தாருக்கு முடிவில்லாத வாழ்வைக் கொடுப்பார்; அப்போது, அவருடைய ஆரம்ப நோக்கம் முழுமையாக நிறைவேறும்.—சங்கீதம் 37:10, 11.