Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 5

இயேசுவின் பிறப்பு​​—⁠எங்கே? எப்போது?

இயேசுவின் பிறப்பு​​—⁠எங்கே? எப்போது?

லூக்கா 2:1-20

  • இயேசு பெத்லகேமில் பிறக்கிறார்

  • குழந்தை இயேசுவைப் பார்க்க மேய்ப்பர்கள் வருகிறார்கள்

குடிமக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டும் என்று ரோம சாம்ராஜ்யத்தின் அரசராகிய அகஸ்து கட்டளையிடுகிறார். யோசேப்பு பெத்லகேம் நகரத்தில் பிறந்தவர் என்பதால் அவரும் மரியாளும் எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற பெத்லகேமுக்குப் போகிறார்கள்.

பெயர்ப்பதிவு செய்வதற்காக நிறைய பேர் பெத்லகேமுக்கு வந்திருப்பதால், யோசேப்புக்கும் மரியாளுக்கும் தங்குவதற்கு இடம் கிடைப்பதில்லை. வேறு வழியில்லாமல், கழுதைகளையும் மற்ற விலங்குகளையும் கட்டி வைக்கிற ஒரு தொழுவத்தில் அவர்கள் தங்குகிறார்கள். அங்கேதான் இயேசு பிறக்கிறார். பிறகு, மரியாள் தன் குழந்தையைத் துணிகளில் சுற்றி, விலங்குகளுக்குத் தீவனம் வைக்கிற தொட்டியில் படுக்க வைக்கிறாள்.

பெயர்ப்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டளையைப் போட கடவுள்தான் அரசராகிய அகஸ்துவைத் தூண்டியிருப்பார். ஏன் அப்படிச் சொல்கிறோம்? அகஸ்து இந்தக் கட்டளையைப் போட்டதால்தான், இயேசு பெத்லகேமில் பிறந்தார். அது அவருடைய மூதாதையான தாவீது ராஜாவின் சொந்த ஊர். இஸ்ரவேலை ஆளப்போகிற ராஜா பெத்லகேமில்தான் பிறப்பார் என்று பல வருஷங்களுக்கு முன்பே வேதவசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.—மீகா 5:2.

இயேசு பிறந்த அந்த ராத்திரியில், வயல்வெளியில் தங்கியிருக்கிற மேய்ப்பர்களைச் சுற்றிப் பிரகாசமான ஒளி வீசுகிறது. யெகோவாவின் மகிமைதான் அப்படிப் பிரகாசிக்கிறது! அப்போது தேவதூதர்களில் ஒருவர், “பயப்படாதீர்கள், எல்லா மக்களுக்கும் அதிக சந்தோஷத்தைத் தருகிற நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். இன்று தாவீதின் ஊரில் உங்களுக்கு ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார், அவர்தான் எஜமானாகிய கிறிஸ்து. அந்தக் குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு, தீவனத் தொட்டியில் படுக்க வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். இதுதான் உங்களுக்கு அடையாளம்” என்று சொல்கிறார். அந்த நொடியே இன்னும் நிறைய தேவதூதர்கள் தோன்றி, “பரலோகத்தில் இருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியில் அவருடைய அனுக்கிரகம் பெற்ற மக்களுக்குச் சமாதானமும் உண்டாகட்டும்” என்று சொல்கிறார்கள்.—லூக்கா 2:10-14.

தேவதூதர்கள் போனதும் மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “வாருங்கள், நாம் உடனே பெத்லகேமுக்குப் போய், யெகோவா நமக்குச் சொன்ன இந்தக் காரியத்தைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொள்கிறார்கள். (லூக்கா 2:15) பின்பு, வேகமாகப் போய் தேவதூதர் சொன்ன அதே இடத்தில் பச்சிளம் குழந்தையான இயேசுவைப் பார்க்கிறார்கள். தேவதூதர் சொன்ன செய்தியை மேய்ப்பர்கள் தெரிவித்தபோது, அதைக் கேட்ட எல்லாரும் ரொம்ப ஆச்சரியப்படுகிறார்கள். மரியாள் அந்த வார்த்தைகளைத் தன் மனதில் பதிய வைத்துக்கொண்டு, அவற்றைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கிறாள்.

இயேசு டிசம்பர் 25-ஆம் தேதி பிறந்தார் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். ஆனால், பெத்லகேமில் டிசம்பர் மாதத்தில் மழையும் குளிரும் அதிகமாக இருக்கும். சிலசமயத்தில், பனியும் பெய்யும். அதனால், அந்த மாதத்தில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு ராத்திரி நேரத்தில் வெளியே தங்க மாட்டார்கள். அதோடு, கடுங்குளிரான அந்த மாதத்தில் பெயர்ப்பதிவு செய்வதற்காக நாள்கணக்கில் பயணம் செய்யும்படி ரோம அரசரும் மக்களிடம் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், மக்கள் ஏற்கெனவே தனக்கு எதிராகக் கலகம் செய்யும் எண்ணத்தோடு இருப்பது அவருக்குத் தெரியும். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, சற்று மிதமான சீதோஷ்ணம் நிலவும் அக்டோபர் மாதத்தில்தான் இயேசு பிறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.