Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 95

யாராலும் அவர்களைத் தடுக்க முடியவில்லை

யாராலும் அவர்களைத் தடுக்க முடியவில்லை

நடக்க முடியாத ஒருவன், ஆலயத்தின் வாசல் பக்கத்தில் உட்கார்ந்து தினமும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். ஒருநாள் மத்தியானம், பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குள் போவதைப் பார்த்தான். ‘தயவுசெய்து ஏதாவது கொடுங்கள்’ என்று அவர்களிடம் கேட்டான். அப்போது பேதுரு, ‘பணத்தைவிட மதிப்புள்ள ஒன்றை உனக்குத் தருகிறேன். இயேசுவின் பெயரில் சொல்கிறேன், எழுந்து நட!’ என்றார். பிறகு, அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கினார். உடனே அவன் நடக்க ஆரம்பித்தான்! அதைப் பார்த்த எல்லாரும் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள். இன்னும் நிறைய பேர் இயேசுவின் சீஷர்களாக ஆனார்கள்.

ஆனால், குருமார்களுக்கும் சதுசேயர்களுக்கும் பயங்கர கோபம் வந்தது. அவர்கள் அப்போஸ்தலர்களைப் பிடித்து, நியாயசங்கத்துக்குக் கொண்டுபோனார்கள். அதுதான் மதத் தலைவர்களின் நீதிமன்றம். ‘இவனைக் குணமாக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு பேதுரு, ‘நீங்கள் கொலை செய்த இயேசு கிறிஸ்துதான் எங்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தார்’ என்று சொன்னார். அப்போது அந்த மதத் தலைவர்கள், ‘இயேசுவைப் பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள்!’ என்று கத்தினார்கள். ஆனால் அப்போஸ்தலர்கள், ‘நாங்கள் அவரைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். அதை நாங்கள் நிறுத்த மாட்டோம்’ என்று சொன்னார்கள்.

பேதுருவும் யோவானும் விடுதலையான உடனே, மற்ற சீஷர்களைப் பார்த்து நடந்த எல்லாவற்றையும் சொன்னார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து ஜெபம் செய்தார்கள். ‘யெகோவாவே, உங்களுடைய வேலையைத் தொடர்ந்து செய்ய எங்களுக்குத் தைரியத்தைக் கொடுங்கள்’ என்று வேண்டினார்கள். யெகோவா அவர்களுக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்ததால், தொடர்ந்து பிரசங்க வேலையைச் செய்தார்கள், மக்களைக் குணமாக்கினார்கள். அதனால், இன்னும் நிறைய பேர் இயேசுவின் சீஷர்களாக ஆனார்கள். சதுசேயர்கள் அப்போஸ்தலர்கள்மேல் பொறாமைப்பட்டு, அவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளினார்கள். ஆனால் ராத்திரியில் யெகோவா ஒரு தேவதூதரை அங்கே அனுப்பினார். அந்தத் தூதர் சிறைக் கதவுகளைத் திறந்தார். ‘நீங்கள் ஆலயத்துக்குப் போய், எல்லாருக்கும் கற்றுக்கொடுங்கள்’ என்று அப்போஸ்தலர்களிடம் சொன்னார்.

அடுத்த நாள் காலையில், நியாயசங்கத்தில் இருந்த மதத் தலைவர்களிடம், ‘சிறை பூட்டித்தான் இருக்கிறது. ஆனால், நீங்கள் கைது செய்த ஆட்களைக் காணவில்லை!’ என்று காவலர்கள் சொன்னார்கள். அப்போது வேறொருவர் வந்து, ‘அவர்கள் ஆலயத்தில் நின்று மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்’ என்றார். அவர்கள் மறுபடியும் அப்போஸ்தலர்களைக் கைது செய்து நியாயசங்கத்துக்குக் கொண்டுவந்தார்கள். தலைமைக் குரு அவர்களிடம், ‘இயேசுவைப் பற்றிப் பேசக் கூடாது என்று உங்களுக்குக் கட்டளை போட்டோம், இல்லையா?’ என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்றார்.

மதத் தலைவர்களுக்குப் பயங்கர கோபம் வந்ததால் அப்போஸ்தலர்களைக் கொன்றுபோட நினைத்தார்கள். ஆனால் கமாலியேல் என்ற பரிசேயர் எழுந்து நின்று, ‘எச்சரிக்கையாக இருங்கள்! ஒருவேளை இந்த ஆட்களுக்கு கடவுள் துணையாக இருக்கலாம். நீங்கள் கடவுளோடு சண்டை போட நினைக்கிறீர்களா?’ என்றார். எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு, அப்போஸ்தலர்களை அடித்து, இனி பிரசங்கிக்கவே கூடாது என்று மறுபடியும் கட்டளை போட்டு அனுப்பிவிட்டார்கள். ஆனாலும், அப்போஸ்தலர்கள் சோர்ந்துபோகவில்லை. தைரியமாக ஆலயத்திலும் வீடு வீடாகவும் நல்ல செய்தியை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

“நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.”—அப்போஸ்தலர் 5:29