ஆதியாகமம் 39:1-23

39  யோசேப்பை இஸ்மவேலர்கள்+ எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.+ எகிப்தியரான போத்திபார்+ யோசேப்பை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார். போத்திபார், பார்வோனுடைய அரண்மனை அதிகாரியாகவும் காவலர்களின் தலைவராகவும் இருந்தார்.  யெகோவா யோசேப்போடு இருந்தார்.+ அதனால், யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. எகிப்தியரான அவருடைய எஜமானின் வீட்டில் அவருக்குப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.  யெகோவா யோசேப்போடு இருந்ததையும், அவர் செய்கிற எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி தந்ததையும் அவருடைய எஜமான் பார்த்தார்.  போத்திபாருக்கு யோசேப்பை மிகவும் பிடித்திருந்தது. அதனால், போத்திபார் அவரைத் தன்னுடைய முக்கிய உதவியாளராக நியமித்து, தன்னுடைய வீட்டையும் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அவருடைய பொறுப்பில் ஒப்படைத்தார்.  அந்தச் சமயத்திலிருந்து, யோசேப்புக்காக அந்த எகிப்தியரின் வீட்டை யெகோவா ஆசீர்வதித்தார். அவருடைய வீட்டிலும் வெளியிலும் இருந்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்தார்.+  போத்திபார் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையுமே யோசேப்பின் பொறுப்பில் விட்டுவிட்டதால், சாப்பிடுகிற உணவைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. யோசேப்பு அழகான, வாட்டசாட்டமான வாலிபராக ஆனார்.  அப்போது, அவருடைய எஜமானின் மனைவி அவரைக் காமக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தாள். “என்னோடு படு!” என்றும் கூப்பிட்டாள்.  ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளாமல், “என் எஜமான் இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் என் கையில் ஒப்படைத்திருக்கிறார். என் பொறுப்பில் இருக்கிற எதைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை.  இந்த வீட்டிலேயே எனக்குத்தான் நிறைய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். எதையுமே அவர் எனக்குத் தராமல் இருக்கவில்லை, உங்களைத் தவிர! ஏனென்றால், நீங்கள் அவருடைய மனைவி! அப்படியிருக்கும்போது, நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?”+ என்று சொன்னார். 10  தினமும் அவள் யோசேப்பிடம் குழைந்துகொண்டே இருந்தாள். ஆனால், அவளோடு படுக்கவோ பொழுதைக் கழிக்கவோ அவர் சம்மதிக்கவே இல்லை. 11  ஒருநாள், வேலையைக் கவனிக்க வீட்டுக்குள் அவர் போனபோது, அங்கு வேலைக்காரர்கள் யாரும் இல்லை. 12  அப்போது அவள் அவருடைய அங்கியைப் பிடித்திழுத்து, “என்னோடு படு!” என்று கூப்பிட்டாள். ஆனால், அவர் தன்னுடைய அங்கியை அவளுடைய கையில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனார். 13  அவர் தன்னுடைய அங்கியை விட்டுவிட்டு ஓடிப்போனதைப் பார்த்ததும், 14  அவள் கூச்சல் போட்டு தன்னுடைய வேலைக்காரர்களைக் கூப்பிட்டு, “பாருங்கள்! என் கணவர் கூட்டிக்கொண்டுவந்த இந்த எபிரெயன் நம் மானத்தை வாங்கப் பார்த்தான். என்னைக் கெடுக்க வந்தான். ஆனால், நான் பயங்கரமாகக் கத்திக் கூச்சல் போட்டேன். 15  நான் போட்ட கூச்சலில், அவனுடைய அங்கியை இங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டான்” என்று சொன்னாள். 16  அதன்பின், போத்திபார் வரும்வரை அவள் அந்த அங்கியைத் தன்னிடம் வைத்திருந்தாள். 17  யோசேப்பின் எஜமான் வந்ததும், “நீங்கள் கூட்டிக்கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் என் மானத்தை வாங்கப் பார்த்தான். 18  நான் கத்திக் கூச்சல் போட்டவுடனே, தன்னுடைய அங்கியை இங்கே போட்டுவிட்டு ஓடிவிட்டான்” என்று சொன்னாள். 19  “உங்கள் வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான்” என்று தன்னுடைய மனைவி சொன்னதைக் கேட்டதும் அவருக்குப் பயங்கர கோபம் வந்தது. 20  அதனால் யோசேப்பைப் பிடித்து, அரசு கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் போடக் கட்டளையிட்டார். யோசேப்பு அந்தச் சிறைச்சாலையிலேயே அடைபட்டுக் கிடந்தார்.+ 21  ஆனால், யெகோவா யோசேப்புடனேயே இருந்தார். அவரைக் கைவிடாமல் மாறாத அன்பை எப்போதும் காட்டிவந்தார். சிறைச்சாலையின் முக்கிய அதிகாரியுடைய பிரியம் யோசேப்புக்குக் கிடைக்கும்படி செய்தார்.+ 22  அதனால், அந்த அதிகாரி அங்கிருந்த எல்லா கைதிகளையும் யோசேப்பின் கண்காணிப்பில் விட்டுவிட்டார். கைதிகள் செய்த எல்லா வேலைகளையும் யோசேப்புதான் மேற்பார்வை செய்துவந்தார்.+ 23  யோசேப்பின் பொறுப்பில் விடப்பட்ட எதைப் பற்றியும் அந்த அதிகாரி கவலைப்படவில்லை. ஏனென்றால், யெகோவா யோசேப்புடனேயே இருந்தார். யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி தந்தார்.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா