ஆதியாகமம் 45:1-28

45  யோசேப்பினால் அதற்கு மேலும் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அங்கிருந்த தன் ஊழியர்களிடம், “எல்லாரும் இங்கிருந்து வெளியே போங்கள்!”+ என்று சத்தமாகச் சொன்னார். தான் யாரென்று தன் சகோதரர்களுக்கு அவர் வெளிப்படுத்தியபோது யாருமே அவருடன் இல்லை.+  அவர் சத்தமாக அழுதார். அதை எகிப்தியர்களும் பார்வோனின் அரண்மனையில் இருந்தவர்களும் கேட்டார்கள்.  கடைசியில் யோசேப்பு தன்னுடைய சகோதரர்களிடம், “நான்தான் யோசேப்பு. அப்பா நன்றாக இருக்கிறாரா?” என்று கேட்டார். அதிர்ச்சியில் அவர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.  அதனால் யோசேப்பு அவர்களிடம், “தயவுசெய்து என் பக்கத்தில் வாருங்கள்” என்று கூப்பிட்டார். அவர்கள் அவருக்குப் பக்கத்தில் போனார்கள். பின்பு அவர், “நான்தான் உங்கள் சகோதரன் யோசேப்பு, எகிப்தியர்களிடம் நீங்கள் விற்றுப்போட்ட அதே யோசேப்புதான்.+  என்னை விற்றதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம், ஒருவர்மேல் ஒருவர் பழிபோட வேண்டாம். உங்கள் உயிரைக் காப்பாற்றத்தான் கடவுள் என்னை உங்களுக்கு முன்னால் இங்கே அனுப்பியிருக்கிறார்.+  தேசத்தில் பஞ்சம் ஆரம்பித்து இப்போதுதான் இரண்டு வருஷம் ஆகியிருக்கிறது.+ இன்னும் ஐந்து வருஷத்துக்கு எதையும் விதைக்கவும் முடியாது, அறுக்கவும் முடியாது.  உங்களையும் உங்களுடைய வம்சத்தையும்*+ அற்புதமாக விடுவிப்பதற்குத்தான் கடவுள் என்னை உங்களுக்கு முன்னால் அனுப்பியிருக்கிறார்.  அதனால், என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல. உண்மைக் கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பார்வோனுடைய முக்கிய ஆலோசகராக* இருந்து, அவருடைய வீட்டையும் நாட்டையும் கவனித்துக்கொள்கிற முழு பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.+  நீங்கள் சீக்கிரமாக அப்பாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்கள் மகன் யோசேப்பு உங்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பியிருக்கிறான்: “கடவுள் என்னை எகிப்து தேசம் முழுவதற்கும் ஆளுநராக நியமித்திருக்கிறார்.+ உடனே புறப்பட்டு வாருங்கள். நேரம் கடத்தாதீர்கள்.+ 10  நீங்களும் உங்கள் மகன்களும் பேரன்களும், ஆடுமாடுகளோடும் மற்ற எல்லாவற்றோடும் எனக்குப் பக்கத்திலேயே கோசேன் பிரதேசத்தில் குடியிருக்கலாம்.+ 11  அங்கு நான் உங்களுக்கு உணவு தருவேன். ஏனென்றால், இன்னும் ஐந்து வருஷத்துக்குப் பஞ்சம் இருக்கும்.+ நீங்கள் வராவிட்டால், நீங்களும் உங்களுடைய வீட்டில் இருக்கிற எல்லாரும் வறுமையில் வாடுவீர்கள், எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.’ இதை நான் சொன்னதாகச் சொல்லுங்கள். 12  உங்களிடம் பேசுவது நான்தான் என்பதை நீங்களும் என் தம்பி பென்யமீனும் கண்கூடாகப் பார்க்கிறீர்களே.+ 13  அதனால், எகிப்தில் எனக்கு இருக்கிற பேரையும் புகழையும், நீங்கள் பார்த்த எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லுங்கள். சீக்கிரமாகப் போய் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். 14  பின்பு, அவர் தன்னுடைய தம்பி பென்யமீனைக் கட்டிப்பிடித்து அழுதார். பென்யமீனும் அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதார்.+ 15  யோசேப்பு தன்னுடைய அண்ணன்கள் எல்லாருக்கும் முத்தம் கொடுத்துவிட்டு அழுதார். அதன்பின், அவர்கள் அவரோடு பேசினார்கள். 16  “யோசேப்பின் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள்!” என்ற செய்தி பார்வோனின் அரண்மனையை எட்டியது. பார்வோனும் அவருடைய ஊழியர்களும் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டார்கள். 17  பின்பு பார்வோன் யோசேப்பிடம், “உன்னுடைய சகோதரர்களிடம் இப்படிச் சொல்: ‘எல்லாவற்றையும் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு கானான் தேசத்துக்குப் போங்கள். 18  அப்பாவையும் வீட்டிலுள்ள எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். எகிப்தில் இருக்கிற நல்ல நல்ல பொருள்களை நான் உங்களுக்குத் தருவேன். இங்கு விளைகிற அருமையான உணவை நீங்கள் சாப்பிடலாம்.’+ 19  அதோடு நீ அவர்களிடம்,+ ‘உங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் கூட்டிக்கொண்டு வருவதற்காக எகிப்து தேசத்திலிருந்து மாட்டு வண்டிகளைக்+ கொண்டுபோங்கள். அப்பாவையும் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு வாருங்கள்.+ 20  நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற பொருள்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.+ எகிப்து தேசத்தில் இருக்கிற சிறந்த பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல். இது என் கட்டளை” என்றார். 21  இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள். பார்வோனுடைய ஆணைப்படி யோசேப்பு அவர்களுக்கு மாட்டு வண்டிகளையும் பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தந்தார். 22  அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய உடையைத் தந்தார். பென்யமீனுக்கு மட்டும் 300 வெள்ளிக் காசுகளும் ஐந்து புதிய உடைகளும் தந்தார்.+ 23  அதோடு, தன்னுடைய அப்பாவுக்காக எகிப்திலிருந்த மிகச் சிறந்த பொருள்களை 10 ஆண் கழுதைகள்மேல் அனுப்பி வைத்தார். அவருடைய பயணத்துக்குத் தேவையான தானியங்களையும் ரொட்டிகளையும் மற்ற உணவுப் பொருள்களையும் 10 பெட்டைக் கழுதைகள்மேல் அனுப்பி வைத்தார். 24  அதேசமயம், “வழியில் சண்டை போட்டுக்கொள்ளாதீர்கள்” என்று தன்னுடைய சகோதரர்களிடம் சொல்லி அனுப்பினார்.+ 25  அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து கிளம்பி கானான் தேசத்திலிருந்த தங்களுடைய அப்பா யாக்கோபிடம் வந்துசேர்ந்தார்கள். 26  அவர்கள் அவரிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான்! எகிப்து தேசம் முழுவதையும் அவன்தான் ஆளுகிறான்!”+ என்றார்கள். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.+ 27  ஆனால், யோசேப்பு சொல்லி அனுப்பியதைக் கேட்டபோதும், தன்னைக் கூட்டிக்கொண்டுவர யோசேப்பு அனுப்பிய மாட்டு வண்டிகளைப் பார்த்தபோதும் உற்சாகம் அடைந்தார். 28  பின்பு இஸ்ரவேல், “இப்போது நான் நம்புகிறேன்! என்னுடைய மகன் யோசேப்பு இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்! நான் சாவதற்கு முன்னால் அவனைப் போய்ப் பார்க்க வேண்டும்!” என்று சொன்னார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “வம்சத்தில் சிலரையும்.”
நே.மொ., “பார்வோனுக்குத் தகப்பனாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா