எபிரெயருக்குக் கடிதம் 3:1-19

3  அதனால், பரலோக அழைப்பில்+ பங்குகொள்கிற பரிசுத்த சகோதரர்களே, நாம் விசுவாசத்தோடு அறிவிக்கிற அப்போஸ்தலரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்+ பற்றி யோசித்துப் பாருங்கள்.  கடவுளுடைய வீட்டில் மோசே சேவை செய்தபோது அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தது போலவே,+ இவரும் தன்னை அப்போஸ்தலராகவும் தலைமைக் குருவாகவும் நியமித்த கடவுளுக்கு+ உண்மையுள்ளவராக இருந்தார்.  ஆனால், வீட்டை உண்டாக்கியவர் வீட்டைவிட அதிக மதிப்புள்ளவராக இருப்பது போல, இவர்* மோசேயைவிட அதிக மகிமையைப்+ பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார்.  உண்மைதான், ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.  பணியாளர் என்ற முறையில் மோசே கடவுளுடைய வீடு முழுவதும் சேவை செய்தபோது உண்மையுள்ளவராக இருந்தார். அவருடைய சேவை, பிற்பாடு வெளிப்படுத்தப்படவிருந்த காரியங்களுக்குச் சாட்சியாக இருந்தது.  ஆனால் கிறிஸ்து, மகன்+ என்ற முறையில் கடவுளுடைய வீட்டின் அதிகாரியாக, உண்மையுள்ளவராக இருந்தார். அதனால், தைரியத்தையும்,* நாம் பெருமைப்படுகிற எதிர்கால நம்பிக்கையையும் முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால், நாமே கடவுளுடைய வீடாக+ இருப்போம்.  அதனால், கடவுளுடைய சக்தி சொல்வது இதுதான்:+ “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  வனாந்தரத்தில் அவரைச் சோதித்துப் பார்த்த நாளன்று அவருக்குப் பயங்கர கோபமூட்டிய உங்கள் முன்னோர்களைப் போல் உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்;+  அங்கே அவர்கள் 40 வருஷங்களாக நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னைச் சோதித்தார்கள்.+ 10  அதனால்தான், நான் அந்தத் தலைமுறையைப் பார்த்து வெறுப்படைந்து, ‘அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது, அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்’ என்று சொன்னேன். 11  அதனால் ‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.”+ 12  அதனால் சகோதரர்களே, உயிருள்ள கடவுளைவிட்டு விலகிப் போவதன் காரணமாக உங்களில் யாருடைய இதயமும் விசுவாசம் இல்லாத பொல்லாத இதயமாக மாறிவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.+ 13  அதோடு, உங்களில் யாருடைய இதயமும் பாவத்தின் வஞ்சக சக்தியால் இறுகிப்போகாதபடி, “இன்று”+ எனக் குறிப்பிடப்படும் காலம் நீடிக்கும்வரை, தினமும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள். 14  ஆரம்பத்தில் நமக்கு இருந்த நம்பிக்கையை முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால் மட்டும்தான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக ஆவோம்.+ 15  அதனால்தான், “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவருக்குப் பயங்கர கோபமூட்டிய உங்கள் முன்னோர்களைப் போல் உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.+ 16  அவருடைய குரலைக் கேட்டும் அவருக்குப் பயங்கர கோபமூட்டியவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லாரும்தான், இல்லையா?+ 17  அதோடு, கடவுள் 40 வருஷங்களாக யார்மீது வெறுப்படைந்தார்?+ பாவம் செய்தவர்கள்மீதுதான், இல்லையா? அவர்களுடைய சடலங்கள் வனாந்தரத்தில் விழுந்தன, இல்லையா?+ 18  தன்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள் என்று அவர் யாரிடம் ஆணையிட்டுச் சொன்னார்? கீழ்ப்படியாதவர்களிடம்தான், இல்லையா? 19  அதனால், விசுவாசம் இல்லாததால்தான் அவரோடு சேர்ந்து அவர்களால் ஓய்வை அனுபவிக்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “இயேசு.”
வே.வா., “தயக்கமில்லாமல் பேசுவதையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா