Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரியாதைக்குரிய பேச்சு என்பது உங்கள் மணவாழ்வு இடிந்துவிழாதபடி பாதுகாக்கிற சிமெண்ட்டாக இருக்கிறது

தம்பதிகளுக்கு

3: மதிப்புமரியாதை

3: மதிப்புமரியாதை

இதன் அர்த்தம் என்ன?

ஒருவருக்கொருவர் மதிப்புமரியாதை காட்டும் தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பாக இருக்கிறார்கள். “இந்தத் தம்பதிகள், தங்களுடைய கருத்துகளில் விடாப்பிடியாக இருப்பதில்லை. அதற்குப் பதிலாக, கருத்துவேறுபாடுகளைக் குறித்து கலந்துபேசுகிறார்கள். தங்களுடைய துணை சொல்கிற கருத்துகளை மரியாதையுடன் கேட்கிறார்கள், பிரச்சினைகளைச் சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள்” என்று டென் லெசன்ஸ் டு ட்ரான்ஸ்ஃபார்ம் யுவர் மேரேஜ் என்ற புத்தகம் சொல்கிறது.

பைபிள் நியமம்: “அன்பு . . . சுயநலமாக நடந்துகொள்ளாது.”—1 கொரிந்தியர் 13:4, 5.

“என் மனைவியோட மதிப்ப புரிஞ்சுகிட்டாதான் நான் அவளுக்கு மரியாதை குடுக்குறேன்னு அர்த்தம்; அவ மனச நோகடிக்குற... எங்க திருமண பந்தத்த பாதிக்குற... எதையுமே நான் செய்ய விரும்ப மாட்டேன்.”—மைக்கா.

இது ஏன் முக்கியம்?

தம்பதிகளுக்கு இடையே மதிப்புமரியாதை இல்லையென்றால், அவர்களுடைய பேச்சு நக்கலாக, குத்தலாக, ஏன் கசப்பானதாகக்கூட ஆகிவிடலாம்; இதெல்லாம் விவாகரத்துக்கான ஆரம்ப அறிகுறிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

“உங்க மனைவிய பத்தி தரக்குறைவா பேசுறது, ஜோக் அடிக்குறது, ரெட்டை அர்த்த வார்த்தைகள பயன்படுத்தி மட்டம்தட்டுறதெல்லாம் அவங்களோட தன்னம்பிக்கைய குலைச்சுப்போட்ரும்; அதோட, உங்கமேல அவங்க வெச்சிருக்குற நம்பிக்கையயும் குலைச்சுப்போட்ரும். இதனால உங்க கல்யாண வாழ்க்கையே சிதைஞ்சிடும்.”—ப்ரையன்.

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்களையே சோதித்துப்பாருங்கள்

ஒரு வாரத்துக்கு உங்கள் பேச்சையும் நடத்தையையும் கவனியுங்கள். பிறகு உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • ‘என் கணவர/மனைவிய நான் எத்தனை தடவை குறை சொன்னேன், எத்தனை தடவை பாராட்டுனேன்?’

  • ‘எந்தெந்த வழிகள்ல என் கணவருக்கு/மனைவிக்கு மரியாதை காட்டுனேன்?’

உங்கள் துணையோடு கலந்துபேசுங்கள்

  • எந்தெந்த செயல்களும் வார்த்தைகளும் ஒருவருக்கொருவர் மரியாதை காட்ட உதவும்?

  • எந்தெந்த செயல்களும் வார்த்தைகளும் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் மரியாதையைக் குலைத்துப்போடும்?

டிப்ஸ்

  • உங்கள் துணை உங்களுக்கு மரியாதை காட்ட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிற ஏதாவது மூன்று வழிகளை எழுதுங்கள். உங்கள் துணையையும் அதேபோல் எழுதச் சொல்லுங்கள். உங்கள் துணை எழுதியதை வாங்கிப் படியுங்கள். அதிலுள்ள விஷயங்களின்படி செய்ய முயற்சி செய்யுங்கள்.

  • உங்கள் துணையிடம் நீங்கள் பார்த்து ரசிக்கிற குணங்களை லிஸ்ட் போடுங்கள். அந்த விஷயங்களைச் சொல்லி அவரை மனதாரப் பாராட்டுங்கள்.

“என் கணவர உயர்வா மதிக்குறேன்னும், அவரு சந்தோஷமா இருக்குறதுதான் எனக்கு முக்கியம்னும் என் செயல்ல காட்டும்போதுதான் அவருக்கு மரியாதை கொடுக்குறேன்னு அர்த்தம். பெரிய விதத்துலதான் மரியாதை காட்டணும்னு இல்ல, சின்னச் சின்ன செயல்லகூட காட்டலாம்.”—மேகன்.

முடிவாக என்ன சொல்லலாம்? உங்கள் துணையிடம் மரியாதையாக நடந்துகொள்கிறீர்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் போதாது. நீங்கள் மரியாதையாக நடந்துகொள்கிறீர்கள் என்பதை உங்கள் துணை உணர வேண்டும்.

பைபிள் நியமம்: “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் பொறுமையையும் காட்டுங்கள்.”—கொலோசெயர் 3:12.