பாடம் 33
கடவுளுடைய ஆட்சி எதை சாதிக்கும்?
கடவுளுடைய அரசாங்கம் ஏற்கெனவே பரலோகத்தில் ஆட்சி செய்துவருகிறது. சீக்கிரத்தில் இந்தப் பூமியில் பெரிய மாற்றங்களை அது கொண்டுவரப்போகிறது. அந்த ஆட்சியால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்க்கலாம்.
1. கடவுளுடைய ஆட்சி எப்படி சமாதானத்தையும் நீதியையும் கொண்டுவரும்?
கடவுளுடைய ஆட்சியின் அரசரான இயேசு, அர்மகெதோன் போரில் கெட்ட மக்களையும் மனித அரசாங்கங்களையும் அழிப்பார். (வெளிப்படுத்துதல் 16:14, 16) அப்போது, “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்” என்று பைபிள் சொல்லும் வாக்கு முழுமையாக நிறைவேறும். (சங்கீதம் 37:10) இயேசுவின் ஆட்சியில் சமாதானமும் நீதியும் இந்தப் பூமி முழுவதும் நிறைந்திருக்கும்.—ஏசாயா 11:4-ஐ வாசியுங்கள்.
2. கடவுளுடைய ஆட்சியில் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?
கடவுளுடைய ஆட்சியில், “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.” (சங்கீதம் 37:29) நம்மைச் சுற்றிலும் நல்லவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். அவர்கள் யெகோவாவை நேசிப்பார்கள், ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருப்பார்கள். யாருக்கும் எந்த நோயும் வராது. எல்லாருமே என்றென்றும் உயிரோடு வாழ்வார்கள். அது எவ்வளவு அருமையான வாழ்க்கை!
3. கெட்டவர்களை அழித்த பிறகு கடவுளுடைய ஆட்சி என்ன செய்யும்?
கெட்டவர்கள் அழிந்த பிறகு இயேசு 1000 வருஷங்களுக்கு ஆட்சி செய்வார். அவரும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரும், மனிதர்கள் பரிபூரணமாக மாற உதவுவார்கள். ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் பூமி ஒரு அழகான பூஞ்சோலையாக மாறியிருக்கும். மக்கள் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து சந்தோஷமாக வாழ்வார்கள். அதன்பின், இயேசு தன் தகப்பனாகிய யெகோவாவிடம் ஆட்சியைத் திருப்பிக் கொடுத்துவிடுவார். இதுவரை இல்லாத அளவுக்கு யெகோவாவின் ‘பெயர் பரிசுத்தமாக்கப்படும்.’ (மத்தேயு 6:9, 10) யெகோவாதான் மக்கள்மேல் உண்மையான அக்கறை வைத்திருக்கும் நல்ல ஆட்சியாளர் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும். அதன்பின், சாத்தானையும், அவனோடு சேர்ந்த பேய்களையும், தன்னுடைய ஆட்சியை எதிர்க்கும் மற்ற எல்லாரையும் யெகோவா அழித்துவிடுவார். (வெளிப்படுத்துதல் 20:7-10) கடவுளுடைய அரசாங்கம் கொண்டுவரப்போகும் அருமையான ஆசீர்வாதங்கள் என்றும் நிலைத்திருக்கும்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
கடவுள் நம் எதிர்காலத்தைப் பற்றி பைபிளில் தந்திருக்கும் வாக்குறுதிகளைத் தன்னுடைய ஆட்சியின் மூலம் நிறைவேற்றுவார். இதை நாம் ஏன் நம்பலாம் என்று இப்போது பார்க்கலாம்.
4. கடவுளுடைய ஆட்சி மனித ஆட்சிக்கு முடிவுகட்டும்
“மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.” (பிரசங்கி 8:9) இந்த அநியாயத்தை யெகோவா தன் ஆட்சியின் மூலம் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவார்.
தானியேல் 2:44-ஐயும், 2 தெசலோனிக்கேயர் 1:6-8-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
-
மனித ஆட்சியையும் அதை ஆதரிக்கிறவர்களையும் யெகோவாவும் இயேசுவும் என்ன செய்வார்கள்?
-
யெகோவாவும் இயேசுவும் நீதிநியாயத்தோடுதான் நடந்துகொள்வார்கள் என்று இதுவரை கற்றுக்கொண்ட விஷயங்களிலிருந்து எப்படி உறுதியாகச் சொல்வீர்கள்?
5. இயேசுவைப் போல் ராஜா யாருமில்லை
ஒரு ராஜாவாக இயேசு தன் குடிமக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்வார். மக்களுக்கு உதவ தனக்கு ஆசை இருப்பதை இயேசு ஏற்கெனவே காட்டியிருக்கிறார். அதைச் செய்வதற்கான சக்தியையும் கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி வீடியோவில் பாருங்கள்.
கடவுளுடைய ஆட்சியில் செய்யப்போகும் அற்புதங்களை இயேசு பூமியில் இருந்தபோது ஒரு சின்ன அளவில் செய்து காட்டினார். பின்வரும் ஆசீர்வாதங்களில் எவற்றைப் பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? அவற்றுக்குப் பக்கத்திலுள்ள வசனங்களை வாசியுங்கள்.
பூமியில் இருந்தபோது இயேசு . . . |
பரலோகத்திலிருந்து இயேசு . . . |
---|---|
|
|
|
|
|
|
|
|
6. கடவுளுடைய ஆட்சியில் அற்புதமான வாழ்க்கை கிடைக்கும்
யெகோவாவின் அரசாங்கம், அவர் ஆரம்பத்தில் நினைத்தது போலவே மனிதர்களை சந்தோஷமாக வாழவைக்கும். மனிதர்கள் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வார்கள். யெகோவா தான் நினைத்ததையெல்லாம் தன் மகன் இயேசு மூலம் எப்படி நிறைவேற்றுகிறார் என்று தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.
சங்கீதம் 145:16-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
-
யெகோவா ‘எல்லா உயிர்களின் ஆசைகளையும் திருப்திப்படுத்துவார்’ என்று தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “மக்கள் எல்லாரும் ஒண்ணுசேர்ந்தா உலகத்துல இருக்குற பிரச்சினைகள எல்லாம் தீர்த்துடலாம்.”
-
மனிதர்களால் தீர்த்துவைக்க முடியாத எந்தப் பிரச்சினைகளைக் கடவுளுடைய ஆட்சி தீர்த்துவைக்கும்?
சுருக்கம்
கடவுளுடைய ஆட்சி அவருடைய விருப்பப்படி இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றும். அங்கே நல்லவர்கள்தான் இருப்பார்கள். அவர்கள் என்றென்றும் யெகோவாவை வணங்குவார்கள்.
ஞாபகம் வருகிறதா?
-
கடவுளுடைய ஆட்சி எப்படி அவருடைய பெயரைப் பரிசுத்தமாக்கும்?
-
பைபிள் தரும் வாக்குறுதிகளைக் கடவுளுடைய ஆட்சி நிறைவேற்றும் என்று நாம் ஏன் நம்பலாம்?
-
கடவுளுடைய ஆட்சி கொண்டுவரப்போகும் எந்த ஆசீர்வாதத்தைப் பார்க்க நீங்கள் ஆசையாகக் காத்திருக்கிறீர்கள்?
அலசிப் பாருங்கள்
அர்மகெதோன் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
இயேசுவின் 1000 வருஷ ஆட்சியிலும் அதன் முடிவிலும் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
குடும்பமாக சேர்ந்து பூஞ்சோலையில் இருப்பதுபோல் நாம் எப்படிக் கற்பனை செய்யலாம் என்று பாருங்கள்.
“நிறைய கேள்விகள் என் மனதைக் குடைந்தன” என்ற கட்டுரையில், அரசாங்கத்துக்கு எதிராகக் கலகம் செய்துவந்த ஒருவர் எப்படிப் பிரச்சினைகளுக்கு விடை கண்டுபிடித்தார் என்று பாருங்கள்.