Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 5

இறைவன் ஏன் இந்தப் பூமியைப் படைத்தார்?

இறைவன் ஏன் இந்தப் பூமியைப் படைத்தார்?

மனிதன் குடியிருப்பதற்காகவே இறைவன் இந்தச் சிங்கார பூமியைச் சிருஷ்டித்தார். ‘வானங்கள் யெகோவாவுடையவை; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்’ என்று வேதம் சொல்கிறது.—சங்கீதம் 115:16.

முதல் மனிதன் ஆதாமைப் படைப்பதற்கு முன்பு, இறைவன் இந்தப் பூமியில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, ஏதேன் என்ற ஓர் அழகிய தோட்டத்தை உருவாக்கினார். யூப்ரடீஸ் (ஐபிராத்து), டைகிரீஸ் (இதெக்கேல்) என்ற நதிகள் அந்த ஏதேன் தோட்டத்திலிருந்து பிறந்ததாக வேதவசனங்கள் சொல்கின்றன. a ஏதேன் தோட்டம் இன்றைய கிழக்கு துருக்கியில் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆம், ஏதேன் தோட்டம் இந்தப் பூமியில் உண்மையிலேயே இருந்தது!

இறைவன்... ஆதாமைப் படைத்து, ஏதேன் தோட்டத்தில் குடிவைத்து, அவன் “அதைப் பண்படுத்தவும் காக்கவும்” செய்தார். (ஆதியாகமம் 2:15) பிறகு, ஆதாமுக்குத் துணைவியாக ஹவ்வா என்ற ஒரு பெண்ணைப் படைத்தார். அந்தத் தம்பதியரிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார். (ஆதியாகமம் 1:28, ERV) ஆகவே, இறைவன் இந்த ‘பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகப் படைத்தார்’ என்பது தெளிவாகத் தெரிகிறது.—ஏசாயா 45:18.

ஆனால், ஆதாமும் ஹவ்வாவும் வேண்டுமென்றே இறைவனின் சட்டத்தை மீறி அவருக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அதனால், இறைவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்; இன்பவனம் கைவிட்டுப் போனது. ஆதாம் செய்த பாவத்தினால் வந்த விளைவுகள் அத்துடன் முடிந்துவிடவில்லை. வேதவசனம் சொல்கிறபடி, “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”—ரோமர் 5:12.

யெகோவா தமது ஆதி நோக்கத்தைக் கைவிட்டுவிட்டாரா, அதாவது பூமியை இன்பவனமாக்க வேண்டும்... அதில் சந்தோஷமுள்ள மக்கள் வாழ வேண்டும்... என்ற நோக்கத்தைக் கைவிட்டுவிட்டாரா? இல்லை! இறைவன் சொல்கிறார்: ‘என் வாயைவிட்டு வரும் வார்த்தைகள் எதையும் செய்யாமல் வெறுமனே என்னிடம் திரும்பாது. எனது வார்த்தைகள் எதைச் செய்ய வேண்டுமென்று நான் அனுப்புகிறேனோ அதை . . . வெற்றிகரமாய்ச் செய்யும்!’ (ஏசாயா 55:11, ERV) ஆம், பூமி மீண்டும் இன்பவனமாக மாறும்!

சரி, இன்பவனத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்? பரிசுத்த வேதம் தரும் வாக்குறுதிகளைப் பற்றி அடுத்த இரண்டு பக்கங்களில் கவனியுங்கள்.

a ஆதியாகமம் 2:10-14 சொல்கிறது: ‘தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், . . . இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், . . . மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் [டைகிரீஸ்] என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடுகிறது; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து [யூப்ரடீஸ்] என்று பேர்.’ முதல் இரண்டு ஆறுகள் இன்றைக்கு எங்கு பாய்கின்றன, என்ன பெயரில் அழைக்கப்படுகின்றன என்ற விவரங்கள் நமக்குத் தெரியாது.