Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 1

உண்மையான இறைநம்பிக்கை என்றால் என்ன?

உண்மையான இறைநம்பிக்கை என்றால் என்ன?

பணத்தைப் போல இறைநம்பிக்கையும் உண்மையானதாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு

உண்மையான இறைநம்பிக்கைக்கு... இறைவன் இருக்கிறார் என்று நம்பினால் மட்டும் போதாது. ‘கடவுள் ஒருவர் இருக்கிறார்’ என்று இன்றைக்கு கோடானுகோடி பேர் நம்புகிறார்கள், அதேசமயம் அட்டூழியங்களையும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட “இறைநம்பிக்கை” கள்ள நோட்டைப் போன்றது. அது பார்ப்பதற்குத்தான் நல்ல நோட்டு மாதிரி தெரியும், ஆனால் உண்மையில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. அப்படியானால், உண்மையான இறைநம்பிக்கை என்றால் என்ன?

உண்மையான இறைநம்பிக்கை பரிசுத்த வேதத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடிப்படையாகக் கொண்டது. இறைவன் யார்... எப்படிப்பட்டவர்... என்பதையெல்லாம் அருளப்பட்ட பரிசுத்த வேதம் நமக்குச் சொல்கிறது; அவரைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. அது மட்டுமல்ல, அவருடைய சட்டதிட்டங்கள், நோக்கங்கள், போதனைகள் ஆகியவற்றையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. அவற்றில் சில...

  • இறைவன் ஒருவரே. அவருக்கு இணை வேறு யாருமில்லை.

  • இயேசு எல்லாம் வல்ல இறைவன் அல்ல, இறைத்தீர்க்கதரிசி.

  • இறைவன் எல்லா வகையான சிலை வழிபாட்டையும் கண்டனம் செய்கிறார்.

  • இறுதித் தீர்ப்பு நாள் விரைவில் வரப்போகிறது.

  • இறந்தவர்கள் இன்பவனத்தில் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

உண்மையான இறைநம்பிக்கை நற்செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது. அப்படிப்பட்ட செயல்கள் இறைவனுக்குப் புகழ் சேர்க்கின்றன, அதுமட்டுமல்ல நமக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்கின்றன. அந்த நற்செயல்களில் சில...

  • இறைவனைத் தொழுவது.

  • இறைவனுக்குப் பிரியமான குணங்களை, முக்கியமாக அன்பை, வளர்த்துக்கொள்வது.

  • கெட்ட எண்ணங்களையும் ஆசைகளையும் ஒழித்துக்கட்டுவது.

  • துன்பங்கள் வந்தாலும் இறைவன்மீது நம்பிக்கை வைத்திருப்பது.

  • இறைவனைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது.

உண்மையான இறைநம்பிக்கை நற்செயல்களைப் பிறப்பிக்கிறது

உண்மையான இறைநம்பிக்கையை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

இறைநம்பிக்கை, உடல் தசைகளைப் போல, பயன்படுத்தப் பயன்படுத்த வலுப்பெறும்

இறைவனிடம் உதவி கேளுங்கள். “நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்” என்று இறைவனிடம் மூஸா தீர்க்கதரிசி வேண்டினார். a இறைவன் அவருடைய வேண்டுதலைக் கேட்டு அதற்குப் பதிலளித்தார். அதனால் மூஸா இறைநம்பிக்கைக்குத் தலைசிறந்த முன்மாதிரியாக விளங்கினார். உண்மையான இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இறைவன் உங்களுக்கும் உதவி செய்வார்.

பரிசுத்த வேதத்தைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள். பரிசுத்த வேதத்தில்... தோரா, சங்கீதங்கள், சுவிசேஷங்கள் போன்ற அருளப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. அது அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பரவலாக வினியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பரிசுத்த வேதம் உங்களிடம் இருக்கிறதா?

பரிசுத்த வேதத்தில் உள்ள அறிவுரையை அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். இறைநம்பிக்கை, உடல் தசைகளைப் போல, பயன்படுத்த பயன்படுத்த வலுப்பெறும். அப்படிப் பயன்படுத்தும்போது, இறைவன் தந்த அறிவுரைகள் பொன்னான அறிவுரைகள்... பலன் தரும் அறிவுரைகள்... என்பதை நீங்களே உங்கள் வாழ்வில் காண்பீர்கள். சொல்லப்போனால், பரிசுத்த வேதத்தில் உள்ள நடைமுறையான ஆலோசனைகள் எத்தனையோ பேருடைய வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கின்றன. அதற்குச் சில உதாரணங்கள் பின்வரும் பக்கங்களில்...